Written on 6:22 AM by பூபாலன்(BOOBALAN)
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நடிகரும், அதிமுக தலைமைக்கழக பேச்சாளருமான ராமராஜனின் மருத்துவச் செலவு முழுவதையும் அதிமுகவே ஏற்றுக் கொண்டுள்ளது.முன்னாள் எம்.பியான ராமராஜன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க. பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
திருச்செந்தூரில் நேற்று அவரது சகோதரர் மகள் காதணி விழாவில் பங்கேற்பதற்காக ராமராஜன் மதுரை வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அவருடன் அவரது அண்ணன் மகன் தாஸ் சென்றார். டிரைவர் ராஜரத்தினம் காரை ஓட்டினார்.
திருமங்கலத்தை அடுத்த நல்லமநாயக்கன்பட்டி பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் ரோட்டோரம் இருந்த பாலத்தின் தடுப்பு சுவர் மீது கார் வேகமாக மோதியது.
இதில் டிரைவர் ராஜரத்தினம் காருக்குள்ளேயே உடல் நசுங்கி பலியானார். நடிகர் ராமராஜனுக்கு தலை, கால் மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. வலது கையும் முறிந்தது. இடுப்பிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. தாசும் பலத்த காயம் அடைந்தார்.
காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நடிகர் ராமராஜன், தாஸ் ஆகியோரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் போலீஸார் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இருவரும் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ராமராஜன் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டாலும் தொடர்ந்து மயக்க நிலையில் இருந்து வருகிறார். அவரை அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து பார்த்தவண்ணம் உள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ராமராஜன் விரைவில் உடல் நலம் பெற பிரார்த்திப்பதாக தெரிவித்திருந்தார். மேலும், அவரதுஉத்தரவின் பேரில், கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
அவர்களிடம் ராமராஜனால் பேச முடியவில்லை. கண்ணைத் திறந்து பார்க்க மட்டுமே முடிந்தது.
இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவை உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு ராமராஜன் நிலையை விளக்கினார். பின்னர் அவர் மருத்துவமனை நிர்வாகத்திடம் சிகிச்சைக்கான செலவுக்காக ரூ. 2 லட்சம் பணத்தைக் கட்டினார். மேலும், உங்களுக்கான அனைத்து மருத்துவ செலவுகளையும் கட்சியே பொறுப்பேற்றுள்ளதாக ராமராஜனிடம் அவர் தெரிவித்து ஆறுதல் கூறினார்.






